மாநிலங்களவையிலும் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேற்றம்..!
கிரண் ரிஜிஜூ, அமித் ஷாவுடன் உறுப்பினர்கள் வாக்குவாதம்

டெல்லி, ஏப்.04 : மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
சர்ச்சைக்குரிய வக்ஃபு மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் நேற்று நீண்ட விவாதம்
இதன் தொடர்ச்சியாக, வக்ஃபு திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நேற்று (ஏப்.03, வியாழன்கிழமை) விவாதம் நடைபெற்றது.
மக்களவையைப் போன்றே மாநிலங்களவையிலும் மசோதா மீது காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
முஸ்லிம்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்காது: கிரண் ரஜிஜூ
விவாதத்தை தொடங்கி வைத்த சிறுபான்மையினர் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த மசோதா முஸ்லிம்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம், உருவாக்கம் மற்றும் பயனாளிகள் பிரத்யேகமாக முஸ்லிம்களாகவே இருப்பார்கள் என்பதால் முஸ்லிம் அல்லாதவர்கள் அதன் விவகாரங்களில் தலையிட முடியாது என்று விளக்கமளித்தார்.
“இந்த மசோதா மதத்தைப் பற்றியது அல்ல, சொத்து மற்றும் அதன் மேலாண்மை பற்றியது என்றும் ஊழலை வேரறுப்பதை நோக்கமாகக் கொண்டது” என்றும் ரிஜிஜூ தெரிவித்தார்.
வக்பு சொத்துகளை பட்டியலிட்ட அமைச்சர்கள்
தொடர்ந்து அமைச்சர் கிரண் ரஜிஜூவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வக்ஃப் என்று பெயரிடப்பட்ட சொத்துகளை பட்டியலிட்டனர்,
அவற்றில் டெல்லியின் லுட்யன்ஸ் மண்டலத்தில் உள்ள சொத்துகள், தமிழ்நாட்டில் 400 ஆண்டுகள் பழமையான கோயில், ஐந்து நட்சத்திர நிறுவனத்திற்கான நிலம் மற்றும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கூட அடங்கும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
கிரண் ரிஜிஜூ மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு பதிலளித்த காங்கிரஸின் சையத் நசீர் உசேன், “123 சொத்துகள் குறித்து குழப்பத்தை உருவாக்குகிறீர்கள்; அவை மசூதிகள், கல்லறைகள் அல்லது தர்காக்கள்” என்று கூறினார். “அவற்றின் பட்டியலை நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்,” என்று நசீர் உசேன் கூறினார்.
மசோதாவை ஆதரித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகள் பிரச்னையைத் திசைதிருப்பவும் தடம் புரள வைக்கவும் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
இஸ்லாமிய நாடுகள் வக்ஃப் சொத்துகளை வெளிப்படையானதாக மாற்றி, அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும்போது, இந்தியா ஏன் மாற்றங்களைச் செய்ய முடியாது என்றும் நட்டா கேள்வி எழுப்பினார்.
பாஜக செய்வது நல்லதல்ல: மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே, மசோதாவை ஒரு கௌரவப் பிரச்னையாக மாற்றக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். “நீங்கள் (அரசு) செய்வது நல்லதல்ல. இது நாட்டில் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் சர்ச்சைகளுக்கு விதைகளை விதைக்கிறீர்கள்… இதை திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றும் கார்கே வலியுறுத்தினார்.
ஆதரவாக 128 வாக்குகள்; எதிராக 95 வாக்குகள்
20 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த வாக்குவாதத்திற்குப் பின்னர் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் கிடைத்தன.