ரூ.20 லட்சம் நகைகளுடன் கூடிய பணப்பையை பறித்த குரங்கு
கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் சேட்டை..!

பிருந்தாவனம், ஜூன்.07; உத்தரபிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் பெண் பக்தரின் ரூ,20 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் கூடிய பணப்பையை குரங்கு பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.
அலிகார் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் அகர்வால் என்பவர் தனது குடும்பத்தினருடன் பிருந்தாவனம் அருகேயுள்ள புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு திரும்பியபோது அவரது மனைவி வைத்திருந்த பணப்பையை குரங்கு பறித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நகைகளுடன் கூடிய பணப்பையை பறித்துச்சென்ற குரங்கு

அந்தப் பையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவை இருந்ததாக பெண் பக்தர் கூறியதை அடுத்து, உள்ளூர்வாசிகள் குரங்கிடமிருந்து பணப்பையை மீட்க முயன்றனர், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது,
அதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு புதரில் இருந்து பணப்பையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட பையில் பத்திரமாக இருந்த நகைகள்..!

பணப்பைக்குள் இருந்த நகைகள் அப்படியே இருப்பது தெரியவந்ததால், பெண் பக்தரும் அவரது கணவர் அபிஷேக் அகர்வாலும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் தங்களது பணப்பை மீட்கப்பட்டதற்கு அந்த தம்பதி நன்றி தெரிவித்தனர்.
கோவிலுக்கு வழிபாடு நடத்த வருவோர் விலை மதிப்பற்ற பொருட்களை பணப்பையில் வைத்து எடுத்துவர வேண்டாம் என்று, காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.







