IML கிரிக்கெட்; இந்தியா மாஸ்டர்ஸ் அணி சாம்பியன்
டினோ பெஸ்ட் -யுவராஜ் சிங் கடும் சொற்போர்

ராய்ப்பூர், மார்ச்.17; சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டியில், இந்திய மாஸ்டர்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
ராய்ப்பூரில் நேற்று (மார்ச்.17) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியும், பிரைன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியைக் காண சுமார் 50,000 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன்கள்
20 ஓவர்கள் கொண்ட போட்டியில், பூவா தலையா வென்ற பிரைன் லாரா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன்கள் எடுத்தார். இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அம்பத்தி ராயுடு 74 ரன்கள் விளாசல்
பின்னர் 149 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
சேஸிங்கின்போது 13ஆவது ஓவரில், முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கும், மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் டினோ பெஸ்ட்டுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
டினோ பெஸ்ட் – யுவராஜ் சிங் சூடான வாக்குவாதம்
இருவரும் விரும்பத்தகாத சில சொற்களைப் பரிமாறிக் கொண்டதால், பிரைன் லாரா, அம்பத்தி ராயுடு, நடுவர் பில்லி பௌடன் ஆகியோர் தலையிட்டு, டினோ பெஸ்ட்டையும் யுவராஜ் சிங்கையும் அமைதிப்படுத்தினர்.
2.5 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், இந்திய மாஸ்டர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசு
போட்டியில் வென்ற இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், இரண்டாவது இடம்பிடித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 50 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.