U-19 மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டி; இந்தியா சாம்பியன்
இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி மகுடம்

கோலாலம்பூர்; மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டி கோலாலம்பூரில் இன்று (டிச.22) நடைபெற்றது. இதில் இந்தியா -வங்கதேச அணிகள் மோதின. பூவா தலையா வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
கோங்காடி த்ரிஷா அசத்தல் அரைசதம்

அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கோங்காடி த்ரிஷா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். மிதிலா வினோத் 12 பந்துகளில் 17 ரன்கள் விளாசினார். நிகி பிரசாத், ஆயுஷி சுக்லா ஆகியோர் ஓரளவு பங்களிப்பை செலுத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசம் தரப்பில் ஃபர்ஜானா யாஸ்மின் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் 118 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தத்தளித்தது. ஃபஹோதிடா சோயா மற்றும் ஜுவைரியா ஃபெர்சதூஸ் முறையே 18 மற்றும் 22 ரன்கள் எடுத்தனர்.
2 வீராங்கனைகள் ரன் எடுக்காமலும், 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களிலும் நடையைக் கட்டினர். இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி 18.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு சுருண்டது.
41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 20 ஓவர் ஆசிய கோப்பையை வசப்படுத்தியது. இந்திய அணி தரப்பில் ஆயுஷி சுக்லா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சோனம் யாதவ், பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இறுதிப் போட்டியில் அரைசதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த கோங்காடி த்ரிஷாவுக்கு player of the match விருது வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோங்காடி த்ரிஷா தான் இந்தியாவின் வெற்றிக்கு சிற்பியாக திகழ்ந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.







