மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வீழ்த்தியது
தொடரையும் வென்றது இந்தியா மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ‘டி-20’ போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியினர், 2-1 என தொடரையும் கைப்பற்றி கோப்பையை வென்றனர்.

இந்தியா சுற்றுப்பயணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று 3வது மற்றும் கடைசி போட்டி நவி மும்பையில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் உமா செத்ரி (0) ஏமாற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா (77), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (39) நல்ல அடித்தளம் அமைத்தனர்.

சிக்சர் மழை பொழிந்த ரிச்சா கோஷ் 18 பந்தில் அரை சதம் அடித்து, டி-20 போட்டியில் குறைந்த பந்தில் மின்னல் வேகத்தில் அரைசதம் கடந்த சாதனையைப் படைத்தார். இவர் 21 பந்தில் 54 ரன்களில் (5 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களை இந்தியா எடுத்தது. ராகவி பிஸ்ட் (31), சஜீவன் சஞ்சனா (4) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, கியானா ஜோசப் (11), கேப்டன் ஹேலி மேத்யூஸ் (22), டீன்டிரா டாட்டின் (25) ஆறுதல் தந்தனர். சினெல்லே ஹென்றி (43) ஓரளவு கைகொடுத்தார். இறுதியில் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன் மட்டும் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியினர், தொடரையும் 2-1 எனக் கைப்பற்றினர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 4 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் ரிச்சா கோஷூம், தொடர் நாயகி விருதை ஸ்மிருதி மந்தனாவும் (193 ரன்) கைப்பற்றினர்.








