பள்ளியில் மூடநம்பிக்கை கருத்துகளை பேசிய விவகாரம்… திருமா கருத்து

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது சரியே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தில் நடைபெற்ற தொழில் அதிபர் ஒருவரின் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்க வந்த தொல். திருமாவளவன், கேப்பரை என்றும் இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது ஏற்கத்தக்கதே. மூடநம்பிக்கை கருத்துகளை பள்ளிக்கூடங்களில் பேசுவதை அனுமதிக்கக்கூடாது. மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பேசிய விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் நடைபெறக் கூடாது. இதுபோன்ற விஷயங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியின் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா அரசியல் கட்சிகளுமே மாநாடு தொடங்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திப்பது வழக்கம் தான். நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெறும். அவரது மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.
“தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, வி.சி.க சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். கூட்டணி எந்த பிரச்னையுமின்றி தொடர்ந்து கொண்டுள்ளது 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. இப்போது அது குறித்த கேள்வி தேவையில்லை” என்றார்.
“வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற திரைப்பட இயக்குநர்கள் ஜாதியை பெருமை பேசக்கூடிய படங்களை எடுப்பதில்லை. சாதிய கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய, விவாதத்திற்கு உள்ளாக்கக்கூடிய கருப்பொருளை மையமாக வைத்துதான் அவர்கள் படங்களை எடுத்து வருகின்றனர். அதுதான் இப்போது ஜாதியை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு பிரச்னையாக உள்ளதே தவிர, அந்த மூன்று திரைப்பட இயக்குநர்களும் ஜாதியவாதத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் அல்ல. புரட்சிகரமான சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் உள்ளது. அதனால்தான், இந்த படங்களின் வாயிலாகத் தங்களது உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். தமிழகத்தில் ஜாதிய பாகுபாடுகள் 99 சதவிகிதம் இன்னும் அப்படியே தான் உள்ளது. ஒரு சதவிகிதம் தான் நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இந்திய அளவில் இந்த விவாதம் விரிவாக்கம் பெற வேண்டும்” என்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
வெகு சிறப்பு! 👌🏼👏🏼💐💐