குடும்பங்கள் கொண்டாடும் “பேடிங்டன் இன் பெரு”
முழு நீள பொழுதுபோக்குத் திரைப்படம்

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் “பேடிங்டன் இன் பெரு” தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது. இது லைப் ஆக்ஷன் அனிமேஷன் சாகச நகைச்சுவைத் திரைப்படமாகும். டகல் வில்சன் இயக்கியுள்ள இப்படம், மார்க் பர்டன், ஜான் ஃபோஸ்டர் மற்றும் ஜேம்ஸ் லாமண்ட் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.
மைக்கல் பாண்டின் பேடிங்டன் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பாடிங்டன் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாக “பேடிங்டன் இன் பெரு” திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
பேடிங்டன் என்ற கரடியின் அத்தை காணாமல் போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக ப்ரெளன் குடும்பத்தினருடன் பெருவியன் காடுகளில் பேடிங்டன் குழுவினர் மேற்கொள்ளும் சாகசப் பயணம்தான் “பேடிங்டன் இன் பெரு” திரைப்படம்.
தன் அத்தையைக் கண்டுபிடிப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து பேடிங்டன் செய்யும் சாகசப் பயணம் கோடைக்கால விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறந்த விருந்தாக இருக்கும். காடுகள், மலைகள், அருவிகள் என பேடிங்டனுடன் நாமும் பெருவியன் காடுகளில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
முதன் முதலில், மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்ஷன் அனிமேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. அதன் வெற்றியின் அடிப்படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ என இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது.
முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார். முதல் படம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மென்மையான மற்றும் கண்ணியமான கரடியைப் பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யாத குற்றத்திற்காக பேடிங்டன் சிறையில் அடைக்கப்படுகிறது. விடுதலை அடைய தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது.
தற்போது அப்படவரிசையில் மூன்றாவது பாகமாக வெளியாகியிருக்கும் ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம், பேடிங்டனின் அத்தையைக் கண்டுபிடிக்க ப்ரெளன் குடும்பம் பெருவியன் காடுகளுக்குள் செல்லும் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுள்ளது.
இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் டூகுல் வில்சன். குடும்பங்கள் கொண்டாடும் வகையில் முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இப்படம், ஆறுகள், பழங்கால இடிபாடுகளுடனான ஒரு சாகசப் பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
முந்தைய இரண்டு பாகங்களைவிட இதில் மேம்பட்ட அனிமேஷன் தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன. குழந்தைகள் குதூகளிக்க குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற திரைப்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.