டி20 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி
சஞ்சு சாம்சன் அதிரடி சதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில், சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள், தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
குறிப்பாக சஞ்சு சாம்சன் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் சிக்சர்களாகப் பறந்தன. அவர் அதிரடியாக சதம் அடித்து, 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33, சூர்யகுமார் 21 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இதில், ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் அவ்வணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிளாசன் 25, கோட்சி 23, ரிக்கல்டன் 21 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதிரடியாக சதம் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டி-20 போட்டி கேபெர்ஹாவில் நாளை நடைபெறுகிறது.
[…] […]