லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்

ரூ.5 கோடி பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும் என இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷின் பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து இருக்கிறார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் குகேஷ்.

உலக செஸ் சாம்பியன் கோப்பையை வென்ற குகேஷ்-க்கு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குகேஷூக்கு ரூ.5 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கினார். அப்போது உலக சாம்பியன்ஷிப்பில் பெற்ற வெற்றி கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார் குகேஷ்.

பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை பாராட்டுகிறேன். இன்றைக்கு உலகமே குகேஷை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்றதும் குகேஷ் கொடுத்த பேட்டியை படித்தேன். அதில் “விளையாட்டுத் திறமையோடு சேர்ந்து சிறந்த குணம், மன உறுதி ஆகியவையும் இணைந்தால்தான், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என குகேஷ் கூறியதை கவனித்தேன்.

அவரது உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் ஆகியவற்றை நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்னும் பல திறமை வாய்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்கவும், உருவாக்கவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இந்த சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். கொரட்டூரில் பிறந்த குகேஷ் இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்த வரலாறு மற்ற வீரர்களுக்கும் வழிகாட்டட்டும் என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வாசுகி லட்சுமணன்

அருமை

Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x