மினி நியூஸ்

  • ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் கடும் வாக்குவாதம்

    பெங்களூரு, பிப்,05; பெங்களூருவில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் கார் மீது ஆட்டோ மோதியது. இதனால் கோபமடைந்த டிராவிட், ஆட்டோ ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான டிராவிட், சொந்த ஊரான பெங்களூருவில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். ராகுல் டிராவிட் காரின் பின்னால் ஆட்டோ மோதியது ஓரிடத்தில், போக்குவரத்து நெரிசலில் டிராவிட்டின் கார் சிக்கியிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு சரக்கு ஆட்டோ டிராவிட்டின் கார் மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிராவிட் தனது காரிலிருந்து இறங்கி, அந்த ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது தாய்மொழியான கன்னடத்தில் டிராவிட் கடுமையாக வாக்குவாதம் செய்தார். டிராவிட்- ஆட்டோ ஓட்டுநர் தர்க்கம்; வீடியோ வைரல்  அப்போது வழிப்போக்கர் ஒருவர் டிராவிட்டிற்கும்- ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே நடந்த தர்க்கத்தை கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார். பிரேக்குகளைப் பேற்றி அவர்கள் ஏதோ பேசுவதை வாக்குவாதத்தில் கேட்க முடிந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராகுல் டிராவிட், ஆட்டோவில் எழுதப்பட்டிருந்த ஓட்டுநரின் கைப்பேசி எண்ணை குறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.  

  • வீரேந்திர சேவாக், மனைவியைப் பிரிகின்றாரா?

    டெல்லி, ஜன.25; மணவிலக்கு வதந்திகளுக்கு மத்தியில் வீரேந்திர சேவாக் மற்றும் மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின் தொடராததால், அவர்கள் பிரிவது உறுதியா? என சந்தேகம் வலுத்துள்ளது. முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி கடந்த 2004-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியைப் பிரிகிறாரா, சேவாக்? கடந்த சில மாதங்களாக, சேவாக் சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனது புகைப்படங்களில் அவரது மனைவி ஆர்த்தி இல்லை. இதனை கவனித்த ரசிகர்கள், அவர்கள் பிரியப்போகின்றார்களா என பேசத் தொடங்கினர். சேவாக்கின் தனிப்பட்ட வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ரசிகர்கள் மத்தியில் ஊகங்கள் பரவி வருகின்றன. இதுபோதாதென்று சேவாக்கும், ஆர்த்தியும் தனித்தனியே வசித்து வருவதால், சந்தேகம் வலுத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை இருப்பினும், அவர்கள் இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் வீரேந்திர சேவாக், 104 டெஸ்ட்களில் 8,586 ரன்கள் எடுத்துள்ளார்.

  • மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் நீரஜ் சோப்ரா

    இமாச்சலப்பிரதேசம், ஜன.20; ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஹிமானி என்பவரை மணந்தார். இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற எளிமையான மணவிழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீரஜ் சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்த தருணத்தில் எங்களை ஒருங்கிணைத்த ஒவ்வொருவரின் ஆசீர்வாதத்திற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மணப்பெண் ஹிமானி அமெரிக்காவில் படித்து வருவதாகவும், அவர் ஒரு டென்னிஸ் வீராங்கனை எனவும் சோப்ராவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

  • ரியல் எஸ்டேட்டில் நடிகர்கள் கோடிக்கணக்கில் முதலீடு..!

    சென்னை, ஜன.19; தமிழ்த் திரையுலகில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்கள், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து பொருள் ஈட்டுகின்றனர். படத்திற்குப் படம் ஊதியத்தை உயர்த்திவரும் பிரபல நடிகர்கள், அதிக லாபம் தரக்கூடிய வேறு தொழில்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அந்த வகையில் பல நடிகர்களின் முதல் தேர்வாக இருப்பது, ரியல் எஸ்டேட். உச்ச நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகப் பேசப்படுகிறது.

  • காலில் கட்டுடன் கவலையுடன் ராஷ்மிகா மந்தனா

    சென்னை, ஜன.12; உடற்பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். படங்களில் பிசியாக இருக்கும் அவர், காயம் காரணமாக தன்னால் மூன்று வாரத்திற்கு நடக்க முடியாது என்று சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் தன்னை மன்னிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ராஷ்மிகா காயமடைந்துள்ளதால், அவர் தொடர்பான படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகாவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  

  • சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ரிஷப் பன்ட் நீக்கம்

    மும்பை, ஜன. 10 ; சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டுள்ளார். தொடரில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 12ஆம் தேதி அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்வுக்குழுவைச் சேர்ந்த சஞ்சய் மஞ்ச்ரேகர் மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோர் ரிஷப் பன்ட்டை நீக்கி உள்ளனர். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது கே.எல். ராகுலை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.      

  • “எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்”

    லாஸ் ஏஞ்சலஸ், ஜன. 9 ; லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தனது எண்ணங்கள் இருப்பதாக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். காதல் கணவர் நிக் ஜோனஸூடன் அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சலஸில் வசித்துவரும் பிரியங்கா, அங்கு பற்றி எரியும் காட்டுத்தீ பற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இன்றிரவு நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்” என பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். இந்தப்பதிவு பிரியங்காவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.  

  • ஜிம்மி கார்ட்டர் உடலுக்கு வாஷிங்டனில் இறுதி மரியாதை

    வாஷிங்டன், ஜன. 9 ; மறைந்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் உடல், அவரது சொந்த ஊரான ஜார்ஜியாவில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் தலைநகர் வாஷிங்டனில் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 39 அதிபரான ஜிம்மி கார்ட்டர், கடந்த மாதம் 29ஆம் தேதி காலமானார். தற்போது வாஷிங்டனில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிபர் ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஜிம்மி கார்ட்டரின் குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

  • இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    சிட்னி, ஜன.9 ; இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பேட் கம்மின்ஸ்-க்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதாலும், கணுக்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.  

  • திபெத் நிலநடுக்கத்தால் 4,000 வீடுகள் தரைமட்டம்

    திபெத், ஜன. 9 ; திபெத்தில் நிலநடுக்கத்தால் 4,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டதால் நாடே துயரில் மூழ்கியுள்ளது. அங்கு இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 126 பேர் பலியாகிவிட்டனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 400 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 30,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  

Back to top button