அஸ்வினுக்கு பிரிவு உபச்சார போட்டி
பிசிசிஐ-க்கு கபில்தேவ் அறிவுறுத்தல்

சுழற்பந்து மன்னன் அஸ்வினுக்கு உரிய பிரிவு உபச்சார போட்டியை ஏற்பாடு செய்து சிறப்பாக முறையில் பிசிசிஐ வழியனுப்பும் என நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அஸ்வின். இவரது ஓய்வு அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த ஏமாற்றம் காணப்படுகிறது. அதேநேரம், பிரிஸ்பேனிலும் அஸ்வின் முகத்தில் லேசான வருத்தத்தை பார்க்க முடிந்தது. அவர் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டார். இந்நிகழ்வு சோகமானது.

மேலும் இந்திய மண்ணில் அஸ்வின் ஓய்வை அறிவித்து இருக்கலாம். ஆனால் அவர் ஏன் இப்படி திடீரென அறிவித்தார் எனத் தெரியவில்லை. எனினும் அவரது முடிவுக்கு மரியாதை தர வேண்டும். தேசத்திற்காக 106 டெஸ்ட்டுகளில் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது எனவும் கபில்தேவ் புகழாரம் சூட்டினார்.

புதிய முயற்சிகளுக்கு எப்போதும் தயாராக இருந்தார் அஸ்வின். இது தான் அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டியது. பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவரும் கிரிக்கெட்டில், அஸ்வின் தனது திறமையால் ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் எந்த சூழலிலும் பந்துவீச தயாராக இருந்தார். விக்கெட் வீழ்த்த வேண்டிய சூழலில், கேப்டன்கள் அழைக்கும் ஒரே பவுலர் அஸ்வின். சூழலுக்கு ஏற்ப தனது திட்டத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் தந்திரம் கொண்டவர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் அசத்தியவர் அஸ்வின். கேரம் பால், ஸ்லோ பால் என விதவிதமாக பவுலிங் செய்தார். கிரிக்கெட் களத்தில் வெற்றிக்காக அனைத்து வழியிலும் போராடினார். அஸ்வின் ஒரு சாம்பியன். நமக்காக அதிக வெற்றி தேடித் தந்தார். எனவே கடைசியாக ஒரு பிரிவு உபச்சார போட்டியில் பங்கேற்க வைத்து அஸ்வினை இந்திய கிரிக்கெட் போர்டு சிறப்பாக முறையில் வழியனுப்பும் என நம்பிக்கை உள்ளது. அவருக்கு உலகில் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனவும் கபில்தேவ் தெரிவித்தார்.






