மினி நியூஸ்
-
இந்திய அணியின் படுதோல்வி; ஆராய்கிறது கிரிக்கெட் வாரியம்
டெல்லி, ஜன.8 ; ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி அடைந்த படுதோல்வி குறித்து ஆராய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஆட்டத்திறன், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் துணை பயிற்சியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இருப்பினும், அவர்கள் மூன்று பேரும் ஆபத்திலிருந்து தப்பிவிடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அவர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது.
-
திபெத் நிலநடுக்கம்; உயிரிழப்பு 126 ஆக உயர்வு
திபெத், ஜன. 8 ; திபெத்தில் நேற்று (ஜன.7) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடர் காரணமாக 3,000க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாகின. காயமடைந்த 180 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக திபெத் மீட்புப் படையினர் கூறியுள்ளனர். திபெத்தில் சமீபத்திய ஆண்டுகளில் இவ்வளவு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை என்று, அரசு தெரிவித்துள்ளது.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ; கடுமையான சேதம்
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன. 8 ; அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீ பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காட்டுத்தீ காரணமாக 30,000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் காட்டுத்தீயால் மேலும் 13,000 கட்டமைப்புகள் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதாக கலிபோர்னியா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவின் புதிய பிரதமராகிறார் அனிதா ஆனந்த்?
ஒட்டாவா, ஜன. 8 ; கனடாவின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படின், கனடாவின் பிரதமராகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை அனிதா பெறுவார். தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் அவர், லிபரல் கட்சியின் மூத்த தலைவராவார். 2019 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், பல்வேறு முக்கிய துறைகளை கவனித்து, கைதேர்ந்த அனுபவம் பெற்றவர்.
-
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல்
டெல்லி, ஜன.7 ; 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 10ஆம் தேதியன்று, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கு 17ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் வரும் 18ஆம் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்பப் பெற வரும் 20ஆம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்காதீர்: ரஜினி
சென்னை, ஜன.7 ; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் கூலி படத்தினபடப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். ரஜினிகாந்தின் 171ஆவது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக தயாராகி வருகின்றது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் இன்று சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானநிலையத்தில், அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியபோது, அரசியல் பற்றிய கேள்விகளை கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே பல முறை கூறியதாக பதிலளித்தார்.
-
ப்ரீ புக்கிங்கில் ‘கேம் சேஞ்சர்’ பட வசூல் படுத்துவிட்டதா?
சென்னை, ஜன.7 ; ப்ரீ புக்கிங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ புக்கிங் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியபோது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இதுவரை ரூ.8 கோடி மட்டுமே வசூலாகியிருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது.
-
3 இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ்
மேற்குக்கரை, ஜன.7 ; மேற்குக்கரையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பிரதான சாலையில் சென்ற இரண்டு கார்கள் மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, ஹமாஸ் அமைப்பினர் தப்பியோடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கொலையாளிகளை வேட்டையாடாமல் விடப் போவதில்லை எனக்கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், நப்லஸ் பகுதியை சுற்றிவளைத்து தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
-
சுப்மன் கில் மிக அதிகமாக மதிப்பிடப்பட்டவர்: ஸ்ரீகாந்த்
சென்னை, ஜன.7 : “சுப்மன் கில் மிக அதிகமாக மதிப்பிடப்பட்ட வீரர்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறை கூறியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஸ்ரீகாந்த், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவை கடுமையாகச் சாடினார். சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்ஷன் போன்ற வீரர்களை தேர்வுக்குழு கவனிக்கத் தவறிவிட்டதாக ஸ்ரீகாந்த் விமர்சித்திருக்கிறார். இந்த மூவரையும் புறக்கணித்ததற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பெரும் கண்ணீர் வடிக்க நேரிட்டதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
-
கான்ஸ்டாஸ் தோளில் கோலி இடித்த விவகாரம்
சிட்னி, ஜன.7 ; ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் சாம் கான்ஸ்டாஸ் தோள்பட்டையில் விராட் கோலி இடித்தது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள கவாஸ்கர், கோபத்தை தூண்டினால் பதிலடி கொடுக்க இந்தியர்கள் வெட்கப்படுவதில்லை என்று கூறினார். ஆனால், இந்நிகழ்வில் ஆத்திரம் எதுவும் தூண்டப்படவில்லை என கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். அதேபோல் வீரர்களை ரசிகர்கள் பரிகாசம் செய்வதால் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், அது அவர்கள் தங்களைத் தாங்களே மகிழ்வித்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும் எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.