அமெரிக்காவுக்கு கொலம்பியா பதிலடி
2 நாடுகள் இடையே கடும் பனிப்போர்?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை ஏற்க மறுத்து கொலம்பியாவின் பதிலடியால், இரு நாடுகள் இடையே கடும் பனிப்போர் ஏற்பட்டு இருக்கிறது.

வாஷிங்டன், ஜன.27; அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார்; முதல் நாளில் இருந்தே அதிரடியான பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்து, அவற்றை மின்னல் வேகத்தில் செயல்படுத்தி வருகிறார். இதில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து உடனடியாக நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதன் படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்து, அமெரிக்க விமானப்படை விமானங்கள் மூலம் சொந்த தேசங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதேபோல், அகதிகளை அனுப்பி வைத்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியாவும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்தினார்.

இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், கொலம்பியா அதிகாரிகளின் விசா ரத்து செய்யப்படும் என்றும், கொலம்பியர்கள் அமெரிக்கா பயணிக்க தடை விதிக்கப்படுவதாகவும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் டிரம்ப்.

இவற்றை பொருட்படுத்தாத கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25% உயர்த்தி உத்தரவிட்டார். மேலும் அமெரிக்காவின் விசா ரத்து, பயணத்தடை போன்ற அறிவிப்புகள் பற்றி கவலை இல்லை என்றும், கொலம்பியர்கள் கீழ்தரமானவர்கள் இல்லை என்றும் பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் அமெரிக்க தூதரகம் விசா சேவையை கொலம்பியாவும் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.








