பும்ரா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
பார்டர் - கவாஸ்கர் முதல் டெஸ்ட்

பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் மோதுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்ற இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார் என தெரிகிறது. இதனால் பெர்த் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் 2-வது போட்டிக்கு முன்பு அவர் இந்திய அணியில் இணைவார் என
கூறப்படுகிறது. இந்தச் சூழலில் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக பெர்த்தில் உள்ள பழைய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து பயிற்சிப் போட்டியில் விளையாடினர். அப்போது துவக்க வீரர் சுப்மன் கில்லின் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் லேசான எலும்பு முறிவு உறுதியாகதால், அவர் முதல் டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பயிற்சியில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து தாக்கியதில், கே.எல்.ராகுலும் வலது முழங்கையில் காயம் அடைய இந்திய அணிக்கு சிக்கல் அதிகமானது. இதனால் பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தரமான துவக்க வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது. இந்நிலையில், கே.எல்.ராகுல் நேற்று 3 மணி நேரம் அசராமல் பயிற்சியில் ஈடுபட்டு உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்தார். அவர் காயத்தில் இருந்து மீண்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்நிலையில் பெர்த் முதல் போட்டியில் இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான நிதிஷ் ரெட்டி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வலுப்படுத்தும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.







