நாடு திரும்பிய தங்க மகன்

“சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில், கடைசி சுற்றுப் போட்டிகளில் தோற்றுவிட்டதால், அந்த நிலையை உணர்ந்து, இம்முறை அமெரிக்காவுடன் வெற்றியை நோக்கி விளையாடினோம். அதனால் தான் அமெரிக்காவை வீழ்த்த முடிந்தது” என்கிறார் சென்னை திரும்பிய இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ். “இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது தான் இரண்டு தங்கப் பதக்கங்கள்” எனவும் சென்னை விமான நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ள நிலையில் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழ்நாடு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடப்பு உலக சாம்பியன் சீனாவைச் சேர்ந்த டிங் லைரின் என்னோடு விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன், அவர் வரவில்லை என்றாலும் மாற்று வீரருக்கும் தயாராக இருந்தேன். என்னை முதல் போர்டில் விளையாட வைத்தது கேப்டன் ஶ்ரீநாத் வியூகம், அதனால் தான் தொடர்ந்து நானும், எரிகேசியும் வெற்றி பெற முடிந்தது. ஆண்கள், பெண்கள் என இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்பான தருணம். ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக முறை தோல்விகளை சந்தித்திருக்கிறோம். சென்னையில் நடந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளோம்”.
“தனிநபர் போட்டியில் தங்கம் வென்றது கூடுதல் மகிழ்ச்சி. இரண்டு பிரிவிலும் தொடர்ந்து பல பயிற்சிகளையும் , முயற்சிகளையும் செய்து வருகிறோம். பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாகத்தான் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளோம். இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது தான் இந்த தங்கப் பதக்கம்” எனவும் குகேஷ் தெரிவித்தார்.







