வேறு யாரையும் விட நான் பெரியவன் அல்ல..: கபில்தேவ்
சாம்பியன்ஸ் கோப்பை விவகாரத்தில் கருத்து

பாகிஸ்தானில் அடுத்தாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள சில நகரங்களை போட்டிக்கான இடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்ததே அதற்கு காரணமாகும். சர்ச்சைக்குரிய ஸ்கார்டு, ஹன்சா மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

முன் ஆலோசனையின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுற்றுப்பயணத்தை அறிவித்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆட்சேபணை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து, புதிய பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் சேர்க்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக, ஐ.சி.சி சாம்பியன்ஸ் தொடரில் வழங்கப்படவிருக்கும் டிராபியின் உலகளாவிய சுற்றுப்பயணம் பாகிஸ்தானில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளிலும் சாம்பியன்ஸ் டிராபி ரசிகர்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.

பாகிஸ்தானில் கராச்சி, அபோதாபாத் மற்றும் டாக்சிலா போன்ற சிறிய நகரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாம்பியன்ஸ் கோப்பை பார்வைக்கு வைக்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் நாடுகளின் துடிப்பான பண்பாட்டை எடுத்துரைக்கும் வண்ணம் கோப்பை உள்ளது. இந்தியாவில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களிலும் வலம் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பையை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பாகிஸ்தானில் தொடங்கி சாம்பியன்ஸ் கோப்பை ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய எட்டு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அந்நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபியை கண்டு மகிழலாம் என்று, ஐசிசியின் தலைமை வர்த்தக அதிகாரி அனுராக் தஹியா கூறியுள்ளார்.

இதுபோன்ற சூழலில், சாம்பியன்ஸ் கோப்பை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், “இப்பிரச்னையில் அரசின் முடிவுதான் முக்கியமானது. இதில் எங்களைப் போன்றவர்கள் கருத்து கூறக் கூடாது, எங்கள் கருத்துகள் முக்கியமில்லை, கபில்தேவ் யாரையும் விட பெரியவராக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.







