தேசிய வாள் வீச்சு போட்டியில் பவானி தேவிக்கு தங்கம்
வெற்றிப்பயணம் தொடர துணை நிற்போம்: உதயநிதி வாழ்த்து

சென்னை, ஜனவரி.2 ; கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
35ஆவது தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டிகள், 2 நாட்களாக கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வருகின்றன. இதில் 29 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 700 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு 3 தங்கப்பதக்கங்கள்

போட்டியில், தமிழ்நாடு மூன்று தங்கப் பதக்கங்களுடன் தனிநபர் பட்டத்தையும், ஹரியானா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் மணிப்பூர், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாம் இடத்தையும் பெற்றன.
தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற பவானிதேவி

மகளிர் தனிநபர் பிரிவுபோட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி 15க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதே பிரிவில் கேரளாவின் அல்கா சன்னி வெள்ளிப் பதக்கமும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷ்ரேயா குப்தா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. பிபிஷ் (K Bibish), கே.பி. கிஷோ நிதி (K P Gisho Nidhi) ஆகியோர் இருவேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்கள்.
பவானி தேவிக்கு உதயநிதி வாழ்த்து

இந்தநிலையில், பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “12ஆவது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தன்னிகரில்லா சாதனையை நிகழ்த்தியிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானி தேவியை வாழ்த்தி மகிழ்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடரட்டும்”

“ஒலிம்பிக் வீராங்கனையான தங்கை பவானி தேவி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட Player என்பது கூடுதல் சிறப்பாகும்” என்றும் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.
“திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் தங்கை பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம்; அவருக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளார்.






