உலக சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளா வருகை!
பினராயி விஜயன் பெருமிதம்!

கேரளாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி வருகை தருவதாக வெளியாகி உள்ள செய்தியால், இந்திய கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில், மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜென்டினா அணி கேரளா வருவது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனால் கேரள மாநிலம் புதிய வரலாறு படைக்க உள்ளது எனவும், மாநில அரசின் முயற்சி மற்றும் அர்ஜென்டினா அணியின் ஆதரவின் காரணமாக இந்த கனவு நனவாகி உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராவோம் எனவும் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்சி கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் விளையாடினார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வெனிசுலாவை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. இந்த சர்வதேச நட்பு ரீதியிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.







