இந்தியா வராவிட்டால் சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து விலகல்
ஐசிசி-க்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணி வரவில்லை என்றால், அந்த தொடரில் இருந்து விலகி விடுவோம் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் 8 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என இந்திய அணி அறிவித்து விட்டதுதான். மேலும், தாங்கள் விளையாடும் போட்டியை மட்டும் வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் எனவும் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் வந்து இந்திய அணி விளையாடவிட்டால், சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து விலகி விடுவோம் என பிசிஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இது ஐசிசிக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பிரச்னையை சமாளிக்க ஐசிசி ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்காவிட்டால், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும், தென் ஆப்பிரிக்காவில் நடத்த திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக மாற்றுத்திட்டத்தை ஐசிசி செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மறுபுறம் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்துவதற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒப்புக்கொள்ள வைக்க ஐசிசி நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். அதில் துபாயில் போட்டியை நடத்தினாலும், அதன் முழு லாபம், டிக்கெட் விற்பனை உள்பட அனைத்து நன்மைகளும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்வதற்கு, ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இன்னும் ஒரு வாரத்தில் சாம்பியன்ஸ் கோப்பை அட்டவணை தீர்மானித்து முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றினால், ஐசிசி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பிசிஐ முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.







