ரிஷப் பன்ட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா ‘குட்டு’
தேவை என்னவென்பதை புரிந்து விளையாட அறிவுரை

மெல்போர்ன், டிச.31; விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு விளையாடவேண்டும் என, கேப்டன் ரோகித் சர்மா கடிந்து கொண்டுள்ளார்.
மெல்போர்னில் நேற்று முடிவடைந்த 4ஆவது டெஸ்ட்டில், இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரிஷப் பன்ட் ஒரு அற்புதமான கூட்டணியை அமைத்தார்.
அவர்கள் இருவரது ஆட்டம் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
மோசமான ஷாட் காரணமாக அவுட்

ஆனால், ரிஷப் பன்ட் ஒரு மோசமான ஷாட்டை அடித்து 30 ரன்களில் விக்கெட்டைபறிகொடுத்தார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.
பன்ட்-க்குப் பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழக்க, இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்ததால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்து, அதற்கேற்ப ரிஷப் பன்ட் விளையாடியிருக்க வேண்டும் என்று கூறினார்.
என்ன தேவை என புரிந்து விளையாடுக

வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், அவர் தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என ரோகித் கூறியுள்ளார். நாம் எவரும் அவருக்குச் (ரிஷப் பன்ட்) சொல்வதைவிட, அவர் அதனைப் புரிந்துகொள்வது அவசியம் என்று கேப்டன் அறிவுறுத்தினார்.
கடந்த காலங்களில், அவர் சிறப்பான செயல்பாடுகள் மூலம் ரிஷப் பன்ட் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என ரோகித் சுட்டிக்காட்டினார். சில நேரங்களில் அவர் விளையாடும் விதத்தை ஆதரித்தாலும், சில தருணங்கள் சரியாக இல்லாதபோது, அவரது ஆட்டம் விரக்தியடையச் செய்வதாக ரோகித் கவலை தெரிவித்தார்.
பன்ட்டின் இதே பாணியிலான ஆட்டம் கடந்த காலங்களில் ஏராளமான வெற்றிகளைக்கொடுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என ரோகித் சர்மா நினைவுபடுத்தினார்.







