விஜய் ஹசாரே தொடரில் ஷாருக்கான் சதம்
தமிழ்நாடு 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் ஷாருக்கானின் அபார சதத்தால், தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேசத்தை அபாரமாக வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் (‘லிஸ்ட் ஏ’) 31வது சீசன் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று உள்ளன. நேற்று விசாகப்பட்டனத்தில் நடந்த “டி”பிரிவு போட்டி ஒன்றில், தமிழகம், உத்தரப்பிரதேசம் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி தலா 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேசம் முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் (0), துஷார் ரஹேஜா (15), ரஞ்சன் (0), பாபா இந்திரஜித் (27), விஜய் சங்கர் (16) ஆகியோர் அவுட்டாக தமிழ்நாடு அணி 68/5 என திணறியது. அப்போது இணைந்த ஷாருக்கான் – முகமது அலி, உத்தரப்பிரதேசம் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ரன் மழை பொழிந்தனர். இதில் ஷாருக்கான் அபார சதம் விளாசி 132 ரன்களுடன் (7×6, 13×4) இறுதிவரை களத்தில் இருந்தார். முகமதுவும் அரைசதம் கடந்து 76 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 5வது விக்கெட்டுக்கு இருவரும் 216 ரன்கள் சேர்த்ததால், தமிழ்நாடு 47 ஓவரில் 284/5 ரன்கள் குவித்தது.

284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி., வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பிரியம் கார்க் (48), கேப்டன் ரிங்கு சிங் (55) ஆகியோர் மட்டுமே ஒரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக உ.பி., அணி 32.5 ஓவரில் 170 ரன்களில் சுருண்டு, 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழகம் சார்பில் சந்தீப், வருண் சக்ரவர்த்தி, விஜய் சங்கர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகன் விருதை ஷாருக்கான் வென்றார்.








