களத்தில் மாற்று பீல்டராக தெ.ஆப்ரிக்க பயிற்சியாளர்..!
வழக்கத்திற்கு மாறானது என்பதால், சமூக வலைதளங்களில் பேசுபொருள்

லாகூர், பிப்.11; நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மாற்று பீல்டராக களமிறங்கியது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் மாற்று பீல்டராக களத்தில்..!

இதில், நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
நியூசிலாந்து பேட்டிங்கின் 37ஆவது ஓவரில், தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் (Wandile Gwavu) வாண்டில் குவாவ் பீல்டிங் செய்து கொண்டிருந்ததை கேமராக்கள் காட்டின. இநனால் அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.
பயிற்சியாளர் பீல்டிங்; சமூக வலைதளங்களில் பேசுபொருள்

ஒரு அணியின் பயிற்சியாளரே பீல்டிங் செய்வது வழக்கத்திற்கு மாறானது என்பதால், இவ்விசயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பயிற்சியாளர் மாற்று வீரராக களமிறங்கலாமா என்றெல்லாம் ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் பேசத் தொடங்கினர்.
தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஒரு வீரராக செயல்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மாற்று பீல்டராக களமிறங்கினார்.
முன்னணி வீரர்கள் வேறு தொடரில் பங்கேற்றுள்ளதால் பற்றாக்குறை

SA20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் பலர் விளையாடி வருவதால், பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் பங்கேற்க 12 பேர் கொண்ட அணியை மட்டுமே தென்னாப்பிரிக்கா அனுப்பி வைத்தது.
இதனால் அவ்வணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை எற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் முன்னணி வீரர்கள் சிலர் தென்னாப்பிரிக்க அணியில் இணைந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







