மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்
திமுக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை, டிச.25; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை; வெட்கக்கேடானது

டெல்லியில் நிர்பயா சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் கழித்து, அதேபோன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை மு.க.ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது என, எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட்டில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு சட்டத்துக்குப் புறம்பான செயல்களின் விளைநிலமாகவும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் மாறிவிட்டதாகச் சாடியுள்ளார். எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக ஆளும் அரசும், காவல்துறையும் மும்முரமாக இருப்பதால், மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.






