கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் ஒருநாள் போட்டி

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அயர்லாந்து பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கு இந்தியா வருகிறது. இந்த ஆட்டங்கள் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் வரும் 10, 12 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் காலை 11:00 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்து இருக்கிறது.

அயர்லாந்து தொடருக்கு இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு(35) ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை 2-1 எனவும், ஒடிஐ தொடரை 3-0 எனவும், ஹர்மன்பிரீத் கவுர் தலையிலான இந்திய அணியினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்-க்கும் ஓய்வு தரப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (28) அயர்லாந்து தொடருக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ரிச்சா கோஷ் மற்றும் உமா செத்ரி விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி இடம் பிடித்துள்ளனர். அத்துடன் பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது, சைமா தாகூர், சயாலி சத்கரே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய பெண்கள் அணியின் விபரம்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது , சைமா தாகூர், சயாலி சத்கரே.








