10 வருஷம் ஆயிடுச்சா… உடனே Renew பண்ணுங்க!
பத்து ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் ஒரு முறை கூட புதுப்பிக்கப்படாமல் இருந்தால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் அவசியமாக வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு மாறி உள்ளது. அரசின் எந்தவித திட்டங்களையும் பெறுவதற்கும், இன்னும் மற்ற பிற சேவைகளை பயன்படுத்துவதற்கும் ஆதார் கார்டு மிகவும் அத்தியாவசியமான ஆவணமாக மாறியுள்ளது.
இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் ஒரு முறை கூட புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களைக் கொண்டு அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து சில விளக்கங்களையும் ஆதார் அடையாள அட்டை ஆணையம் அளித்துள்ளது.
• எல்லோரும் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கிய கார்டை மட்டுமே புதுப்பிக்க வேண்டும்.
• ஆதாரை ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் எளிது. ஆதாரை புதுப்பிக்க Myaadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதாரை இலவசமாக புதுப்பிக்கலாம், அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் புதுப்பிக்கலாம். புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு ஆதார் அப்டேட் செய்யப்பட்ட தகவல் அனைவரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
• ஆன்லைனில் பதிவு செய்தால் 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் கிடைக்கும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கட்டாயம் கார்டை புதுப்பிக்க வேண்டும்.
• எல்லோரும் புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை. பழைய கார்டு செல்லாது என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை
• முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் இருந்தால் புதுப்பித்தல் அவசியம்.
எனவே, பொதுமக்கள் ஆதார் அப்டேட் செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






