சிட்னி காயத்தால் பும்ரா சந்தேகம்?
இங்கி.,தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி கடைசி டெஸ்டில் முதுகுப்பகுதியில் திடீரென தசைபிடிப்பு ஏற்பட்டதால் பும்ரா பாதியில் விலகினார். கவாஸ்கர்- பார்டர் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 151.2 ஓவர்கள் பந்து வீசிய அவர், 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். இருப்பினும் அதிக ஓவர்கள் பந்து வீசியதால்தான் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது பும்ராவுக்கு உண்டாகியுள்ள காயத்தின் தன்மை குறித்து இதுவரை மருத்துவ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை இவரது காயம் ‘கிரேடு-1’ என்றால், 3 வாரங்கள் ஓய்வில் இருப்பார். அதேவேளையில் ‘கிரேடு-2’ காயம் எனில் 6 வாரங்களும், கிரேடு-3 காயமாக இருந்தால் குறைந்தபட்சம் 3 மாதங்களும் ஓய்வில் இருக்க வேண்டும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிராக 5 ‘டி-20’ போட்டிகள் (ஜன. 22, 25, 28, 31, பிப். 2), மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் (பிப். 6, 9, 12) இந்திய அணி பங்கேற்கிறது. இதனைத்தொடர்ந்து ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் (பிப். 19 – மார்ச் 9) விளையாடுகிறது இந்தியா.

இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 மற்றும் ஒடிஐ தொடர்களில் பும்ரா பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் விதமாகவும், பும்ராவின் உடற்தகுதியை பொறுத்தும், இங்கி.,க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் (பிப். 12, ஆமதாபாத்) பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.







