மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
திரௌபதி முர்மு, மோடி,சோனியா, ராகுல் பங்கேற்பு

டெல்லி,டிச.28 ; மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங்கின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அஞ்சலி செலுத்திய பின்னர், இன்று (Nigambodh Ghat) நிகம்போத் காட் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
மக்கள் கண்ணீர் அஞ்சலி

அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் தகனம் நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்பட்ட மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜனதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பூடான் மன்னர், மொரிஷியஸ் வெளியுறவு அமைச்சர் தனஞ்ஜெய் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
சிதைக்கு தீ மூட்டிய மூத்த மகள்

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌகான் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் முப்படையினர் 21 குண்டுகள் முழங்க, மன்மோகன் சிங்கின் உடலுக்கு அவரது மூத்த மகள் உபிந்தர் சிங் தீ மூட்டினார்.







