மே.இ.தீவுகளின் கடைசி 3 பேட்ஸ்மேன்கள் சரித்திரம்
டெஸ்ட்டில், 148 ஆண்டுகளில் 2ஆவது முறையாக சாதனை

முல்தான், ஜன.26; பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி 3 பேட்ஸ்மேன்கள், அதாவது பந்துவீச்சாளர்கள் மீண்டும் சரித்திரம் படைத்துள்ளனர்.
முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்டும் அதே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
மே.இ.தீவுகளை காப்பாற்றிய கடைசி 3 பேட்ஸ்மேன்கள்

இதில், மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 54 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, அவ்வணியின் கடைசி 3 பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர்.
குடாகேஷ் மோட்டி, கெமர் ரோச் மற்றும் ஜோமெல் வாரிக்கன் ஆகியோர் முறையே 55, 25 மற்றும் 36 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சாளர்களான அவர்கள் மூவரும் கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கு 116 ரன்கள் சேர்த்தனர்.
148 ஆண்டுகளில் 2ஆவது முறையாகும்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 3 பேட்ஸ்மேன்கள் இவ்வளவு ரன்கள் குவித்திருப்பது, கடந்த 148 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.
இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு அடங்கியது. பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை வரலாற்றில் நோமன் அலி பதிவு செய்தார்.
பாகிஸ்தானும் சுருண்டது; வெற்றி யாருக்கு?

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியும் மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சுக்கு பணிந்து, 154 ரன்களுக்கு சுருண்டது.
9 ரன்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்சில் இன்றைய மதிய உணவு இடைவேளையின் போது 5 விக்கட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் அவ்வணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியைப் போலவே இந்த டெஸ்ட்டிலும் முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.







