கர்நாடக பெண் அமைச்சரை அவமதிக்கும் வகையில் பேச்சு?
பாஜக தலைவர் மீதான விசாரணை சிஐடிக்கு மாற்றம்

பெங்களூரு, டிச.24; கர்நாடக பெண் அமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி), மாநில அரசு ஒப்படைத்துள்ளது.
கடந்த 19ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கருக்கு (Laxmi Hebbalkar) எதிராக பாஜக மேலவை உறுப்பினர் சி.டி.ரவி தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.டி.ரவி தன்னை ‘விலைமாது’ என்று அழைத்ததாக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
பாஜகவின் சிடி ரவி கைதாகி விடுவிப்பு

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமைச்சர் லக்ஷ்மி அளித்த புகாரின் பேரில், அன்றைய தினமே C.T. ரவி கைது செய்யப்பட்டார். பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் படி, ரவி விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்ஷ்மி ஹெப்பால்கர், பாஜக தலைவர் ரவியின் பேச்சு தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அதிலிருந்து விடுபட தனக்கு 2 நாட்கள் பிடித்ததாகவும் கூறியிருந்தார். தனக்கு எதிராக இப்படி ஒரு இழிசொல்லை இதுவரை எவரும் பயன்படுத்தியதில்லை என்றும் லக்ஷ்மி தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற சூழலில், C.T. ரவி மீதான வழக்கின் விசாரணையை, குற்றப் புலனாய்வுத் துறையான சி.ஐ.டி வசம் கர்நாடக உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.
சட்டப்பேரவையில் சி.டி.ரவி பேசியதாகக் கூறப்படும் ஆடியோ மற்றும் காட்சி ஆதாரங்களை சி.ஐ.டி விசாரணை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







