அடிலெய்டில் பழி தீர்க்கப் போவது யார்?
பகலிரவு டெஸ்ட் நாளை துவக்கம்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நாளை துவங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில், பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில், அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இதில் ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் இந்திய அணி மீண்டும் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கோஹ்லி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் என பலமாக இருக்கிறது. பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ரானா வேகத்தில் மிரட்டுகின்றனர். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை பொறுத்தவரை கவாஜா, லபுசேன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரியுடன், புதுமுகம் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டு உள்ளார். பவுலிங்கில் ஹேசல்வுட் காயத்தால் விலகியதால், போலன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், போலன்ட் உடன் வெப்ஸ்டரும் இணைய வாய்ப்பு இருக்கிறது.

பெர்த் முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்க் பட்டியலில் 3-வது இடத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளுப்பட்டுள்ளது. இதனால் அடிலெய்ட் டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்வதுடன், இந்தியாவுக்கும் பதிலடி கொடுக்கவும் காத்திருக்கிறது ஆஸ்திரேலியா.

கடந்த 2020-ல் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் இந்தியாவை 36 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா. இதுவே இந்தியாவின் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இந்த முறை அதற்கு பழிதீர்க்கவும் இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே நாளை அடிலெய்டில் 88 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் முதல் நாள் ஆட்டம் மிகவும் தடைபடலாம். அதேநேரம் 2-வது நாள் முதல் வானம் தெளிவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இந்த போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.







