பழம்பெரும் பாடகர் பி. ஜெயச்சந்திரன் மறைவு
ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..

திருச்சூர், ஜன.10 ; காந்தக்குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் நேற்று (ஜன.9) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது உயிர் பிரிந்தது. மூன்று முடிச்சு படத்தில், “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்…” என்ற பாடலில் தொடங்கிய அவரது இசைப்பயணம் சுமார் அரை நூற்றாண்டு காலம் நீடித்தது. “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், சொல்லாமலே யார் பார்த்தது, காதல் வெண்ணிலா கையில் சேருமா..” என நீள்கிறது ஜெயச்சந்திரனின் ஹிட் பாடல்கள். திகட்டாத தேனமுதக் குரலுக்குச் சொந்தக்காரரான அவர், தமிழ், மலையாளம் உள்பட பல மொழிகளில் சுமார் 16,000 பாடல்களை பாடியுள்ளார். ஜெயச்சந்திரனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







