பாகிஸ்தான் நாட்டவருக்கு இந்தியாவுக்குள் அனுமதி மறுப்பு
கர்நாடகா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பயணித்தவர்

பெங்களூரு,மே.15; கர்நாடக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தானிய கப்பலில் இருந்த பாகிஸ்தான் நாட்டவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்திற்கு MT R Ocean என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது. கச்சா எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும் bitumen என்ற பொருளுடன் ஈராக்கிலிருந்து வந்திருக்கும் அந்தக் கப்பலில் 15 இந்திய பணியாளர்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானிய நாட்டவர் உள்ளனர்.
கர்நாடகா துறைமுகத்தில் தடுக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டவர்

அவர்களில் பாகிஸ்தான் குடிமகன் இந்திய மண்ணில் கால் வைப்பதை தடுத்த அதிகாரிகள், அவரது கைப்பேசி மற்றும் ஆவணங்களை கப்பல் மாலுமியின் உதவியுடன் பறிமுதல் செய்தனர்.
அந்த நபர் இந்தியாவுக்குள் நுழைய துறைமுக அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்று (மே.15)தெரிவித்தனர்.
ஷார்ஜாவுக்குப் புறப்பட்டுச் சென்ற பாகிஸ்தான் கப்பல்

“நாங்கள் இந்தத் தகவலை உளவுத்துறை மற்றும் கார்வார் காவல்துறையினருடன் பகிர்ந்து கொண்டோம். பாகிஸ்தான் நாட்டவரை இறங்க அனுமதிக்க வேண்டாம் என்று அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தினர்” என்று கப்பல் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பின்னர் MT R Ocean கப்பல் ஷார்ஜாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக கார்வார் துறைமுக நிர்வாக உதவியாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் & சீன கப்பல்களுக்கு அனுமதியில்லை

பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து வரும் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.







