“கவனத்தை திசை திருப்ப வெளிநாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்புகிறார்”
பிரதமர் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடல்

டெல்லி, மே.21; பஹல்காம் விவகாரம் தொடர்பான கடினமான கேள்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி அனுப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் (மே.21)அனுசரிக்கப்படுவதை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
“வெளிநாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பும் மரபை நிறுத்தியவர் மோடி”

அதில், ““1950களில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒவ்வொரு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபைக்கு பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டு வருகின்றனர்- நரேந்திர மோடி 2014ல் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்த மரபை நிறுத்திவிட்டார்” என ரமேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
உலகளவில் பிரதமர் மோடியின் பிம்பம் சிதைந்துவிட்டதால், அவர் பல்வேறு நாடுகளுக்கும் பல கட்சி எம்.பி.க்களின் பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து திடீரென யோசித்ததாக ஜெய்ராம் ரமேஷ் சாடினார்.
“பஹல்காம் விவகாரத்தில் மோடியின் பிம்பம் சிதைந்தது”

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மிகவும் விரக்தியடைந்துள்ள மோடியின் பிம்பம் சிதைந்துவிட்டதால், கடினமான கேள்விகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப, பல்வேறு தந்திரங்களை கடைப்பிடிப்பதாக ஜெய்ராம் விமர்சித்தார்.







