3 தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துகள்!
உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி

அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில், 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ள தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. அதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என 3 பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து, 3 தங்கப் பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது எக்ஸ் தளத்தில் காசிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டியில், சென்னையைச் சேர்ந்த நம் தமிழ் மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!.. பெருமை கொள்கிறேன் மகளே!… எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!”… எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும், தமது எக்ஸ் தளப் பதிவில், காசிமாவுக்கு வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார். அதில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் காசிமா சாதனைப் படைத்துள்ளார். கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் – பயிற்சிக்காக, ரூ.1.50 லட்சத்தை வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!…எனப் பதிவிட்டுள்ளார்.







