“அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் காம்ப்ளி”
வீடியோ காட்சிகளுடன் நண்பர் வெளியிட்ட தகவல்

மும்பை, டிச.24: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வினோத் காம்ப்ளி, மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு, தானே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
காம்ப்ளி பேசும் வீடியோ வெளியீடு

இதுபோன்ற சூழலில், காம்ப்ளியின் நெருங்கிய நண்பரான மார்கஸ் குடோ என்பவர், அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது காம்ப்ளியுடன்எடுத்துக்கொண்ட வீடியோவை மார்கஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இங்குள்ள (அக்ரிதி மருத்துவமனை) மருத்துவர்களால் நான் உயிருடன் இருக்கின்றேன். அவர்களுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் காம்ப்ளி பேசும் வீடியோவை மார்கஸ் குடோ வெளியிட்டுள்ளார்.
அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் காம்ப்ளி

மேலும், காம்ப்ளி அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மார்கஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும், காம்ப்ளி தற்போது வீடு திரும்பும் நிலையில் இல்லை என அவர் கூறியுள்ளார். எனவே, சுமார் ஒரு மாத காலத்திற்கு காம்ப்ளியை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும்படி, மருத்துவமனை நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக மார்கஸ் குடோ தெரிவித்துள்ளார்.
காம்ப்ளிக்கான மருத்துவச் செலவுகளை வேறு ஒருவர் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்திருப்பதாவும் குடோ கூறியிருக்கிறார். வினோத் காம்ப்ளியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மன நிம்மதியை தந்துள்ளது.







