வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு
மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவித்தார், நிர்மலா சீதாராமன்

டெல்லி, பிப்.01; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்ரவரி.01) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு

இந்த நிதி நிலை அறிக்கையில், ரூ.12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி கட்டத்தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி விகிதக் கட்டமைப்புகளை பின்வருமாறு திருத்த நான் முன்மொழிகிறேன்: 0 முதல் ₹4 லட்சம் வரை – பூஜ்யம், ₹4 லட்சம் முதல் ₹8 லட்சம் வரை – 5%, ₹8 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை – 10%, ₹12 லட்சம் முதல் ₹16 லட்சம் வரை – 15% , ₹16 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை – 20%, ₹20 லட்சம் முதல் ₹24 லட்சம் வரை – 25% மற்றும் ₹24 லட்சத்திற்கு மேல் – 30%. மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தைத் தவிர சாதாரண வருமானம் ₹12 லட்சம் வரை உள்ள வரி செலுத்துவோர், வரி செலுத்த வேண்டிய வரி இல்லாத வகையில் ஸ்லாப் விகிதக் குறைப்பினால் கிடைக்கும் பலன்களுக்கு கூடுதலாக வரிச் சலுகை வழங்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
2 முறைகளில் வரி செலுத்தலாம்

வரி செலுத்துவோர் இரண்டு வரி முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அது பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை.
பழைய வரி முறை வீட்டு வாடகை, காப்பீடு மற்றும் பிற நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புதிய வரி விதிப்பு, சற்று குறைவான சலுகைகளை வழங்குகிறது; ஆனால் விலக்குகளை அனுமதிக்காது.
நடுத்தர வர்க்கத்தினர், மாதச்சம்பளம் வாங்குவோர் வரவேற்பு

ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பை, நடுத்தர வர்க்கத்தினரும், மாதச் சம்பளம் வாங்குவோரும் வரவேற்றுள்ளனர்.







