சமூக ஊடக கணக்கு தொடங்க நிபந்தனை
18 வயதுக்கு உட்பட்டோருக்கு பெற்றோர் ஒப்புதல் தேவை

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகள் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என்று, ஒன்றிய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தினந்தோறும் அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் குழந்தைகளின் நலன்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால், அவர்களின் கல்வி, மனநிலை, உடல்நிலை
உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக கூறி 16 வயதுக்கு உட்பட்டோர் சோசியல் மீடியாக்களை பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு அண்மையில் தடை விதித்தது, இதற்கு ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் வரைவு விதிகளை வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. அதில் இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகள் தொடங்க பெற்றோரின் ஒப்புதல் தேவை என்றும், அதனை சம்மந்தப்பட்ட வலைத்தளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்புதலை சரிபார்ப்பதற்கு, மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்டால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

மேலும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் வரைவு விதிகள் பின்பற்றப்படுவதை மேற்பார்வையிடுவதற்கு, தரவு பாதுகாப்பு வாரியத்தை நிறுவவும் மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் ஒழுங்கு முறை அமைப்பாக செயல்படும் வரைவு விதிகளில், ஆட்சேபனை இருந்தாலோ அல்லது பரிந்துரை வழங்க வேண்டும் என்றாலோ MyGov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்றும், பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு பிறகு கருத்துக்கள் பரீசீலிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது.








