2034 உலகக் கோப்பை கால்பந்து தொடர்
வாய்ப்பை பெற்றது சவுதி அரேபியா

2034-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை சவுதி அரேபியா தட்டிச் சென்றுள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள பூமி பந்தின் நாடி துடிப்பை அதிரச் செய்யும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு என்றுமே முதலிடம் உண்டு. உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகளை மட்டுமே காண்பதற்கு நாள்தோறும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் கால்பந்துக்காக உயிரைக் கொடுக்க தயங்காத ரசிகர்கள் ஏராளம். இதனால்தான் உலக கால்பந்து அரங்கில் இந்த நாடுகள் சாம்பியன்களாகவும், அவ்வணி வீரர்கள் கால்பந்து ஜாம்பவான்களாகவும் திகழ்கின்றனர்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான (‘பிபா’) சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. கடைசியாக 2022-ம் ஆண்டில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

இதனைத்தொடர்ந்து 2026-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர், ஜூன் 11 முதல் ஜூலை 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில் மொத்தம் 46 அணிகள் விளையாடுகின்றன. இதற்காக புதிய மைதானம் அமைத்தல் உள்பட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமங்களை எந்தந்த நாடுகளுக்கு வழங்குவது என்பது குறித்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள பிபா தலைமையகத்தில் ‘பிபா’ நிர்வாக கமிட்டியினர், நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 6 கண்டங்கள் சார்பாக மொத்தம் 46 அணிகள் இடம் பெறுகின்றன.

இதேபோல் 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பு சவுதி அரேபியாவுக்கு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியா இந்த கால்பந்து தொடரை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நாடு வெகுசிறப்பாக நடத்தி பல்வேறு சாதனைகள் படைத்தது. இந்நிலையில் உலக வணிகத்தில் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் முதன்மையாக திகழும் சவுதி அரேபியாவுக்கு, 2034-ல் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைப்பதிருப்பது கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.








