ஆஸி.,யை வீழ்த்திய இந்தியா
பயிற்சி போட்டியில் அபார வெற்றி

ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது இந்தியா. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி (‘பிங்க்பால்’)பகலிரவு ஆட்டமாக வரும் டிச. 6-10 தேதி அடிலெய்டில் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, கான்பெரா மனுகா ஓவல் மைதானத்தில், இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகள் மோதிய 2 நாட்கள் பகலிரவு பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் ஆட்டம் 50 ஓவர் போட்டியாக நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இடையில் மழை பெய்ததால் ஆட்டம் 46 ஓவராக குறைக்கப்பட்டது. அப்போது அபாரமாக ஆடிய தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் சதம் கடந்து 107 ரன்களில் அவுட்டானார். ஜேக் கிளேடன் 40, ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 43.2 ஓவரில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா 4, ஆகாஷ் தீப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, கே.எல்.ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடி நல்ல தொடக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் (45) அவுட்டானார். கே.எல்.ராகுல் 27 ரன்னில் ‘ரிட்டையர்டு ஹார்ட்’ முறையில் வெளியேறினார். 4-வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் முதல் டெஸ்டில் பங்கேற்காத சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்டு வந்து அரைசதம் அடித்து ‘ரிட்டையர்டு ஹார்ட்’ முறையில் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து நிதிஷ் குமார் 42, ஜடேஜா 27, வாஷிங்டன் சுந்தர் 42* ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி 42.5 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனாலும் பயிற்சிக்காக 46 ஓவர்களும் முழுமையாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து கொண்டது.

இதனிடையே கான்பெரா பயிற்சி போட்டியில் பங்கேற்காத விராத் கோலி, பும்ரா, அஷ்வின் உள்பட இந்திய வீரர்கள் தனியாக தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது கோலிக்கு நீண்ட நேரம் பந்து வீசினார் அஷ்வின். இதன்மூலம் கடந்த முறை (2020-21) அடிலெய்டு டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்திய அவர், நடப்பு 2-வது டெஸ்டில் இடம் பெறுவார் என தெரிகிறது.







