டேய் அப்பா என்னடா இதெல்லாம்!…
தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் பதிவு வைரல்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து உடனடியாக ஓய்வுப் பெறுவதாக அறிவித்தது குறித்து, தனது தந்தை அளித்த பேட்டியை கலாய்த்து, அஸ்வின் வெளியிட்டுள்ள “எக்ஸ்” தளப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான பிரிஸ்பேன் 3-வது டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பேட்டியளித்த அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன், அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். தொடர்ந்து அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது தமது மகன் ஓய்வை அறிவித்திருக்கலாம்.

உண்மையில் எனக்கும் அந்த ஓய்வு கடைசி நிமிடத்தில்தான் தெரிந்தது. அஸ்வின் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. அவர் அறிவித்த ஓய்வை நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட முடியாது என ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.

இருப்பினும் 14 – 15 வருடங்கள் களத்தில் விளையாடிய அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றதால் எங்கள் குடும்பத்திற்கும் ஆச்சரியம்தான். அதே சமயம் ஒரு விதமான அவமானம் அவருக்குள் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நாட்கள் அதை அஸ்வினால் சமாளிக்க முடியும்? அதனாலேயே இந்த முடிவை அவர் அறிவித்திருக்கலாம் என்றும் ரவிச்சந்திரன் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தனது தந்தையின் கருத்து குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “என் அப்பா ஊடகப் பயிற்சி பெற்றவர் அல்ல. டேய் பாதர் என்னடா இதெல்லாம்!… மற்ற வீரர்களின் அப்பாக்களைபோல் எனது அப்பாவும் பேசுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனது தந்தை கூறியதை பெரிதுபடுத்தாதீர்கள். எனது ஓய்வு குறித்து தந்தை கூறிய கருத்துக்களை ஏற்க வேண்டாம். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள்.. என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.







