மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசும் மாநகராட்சியும் செய்திருக்கின்றன என்று சென்னை ஓட்டேரி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தபின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கக்கூடிய நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார், அந்த வகையில் ஓட்டேரி நல்லா கால்வாய், அம்பேத்கர் பாலம், பேசின் பிரிட்ஜ் பகுதி, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வுகளின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வின்போது ஓட்டேரியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி அனைத்து வகையிலும் தயாராக உள்ளதாகவும், 22,000 பணியாளர்கள் 18,500 தன்னார்வலர்கள் பருவ மழையில் பணியாற்ற பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். நாங்கள் எல்லாரும் தயாராக இருக்கிறோம் மழைதான் வரணும் என்று கூறினார்.
இதுவரை சிறிய அளவில் தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டுள்ளது என்ற அவர், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை மீட்டுக் கொண்டு வர 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது என்றார். அனைத்து சுரங்கப் பாதைகளும் சாதாரண நிலையில் உள்ளது. ஆயிரம் டன் முதல் 15 ஆயிரம் டன் வரை ஓட்டேரி நல்லான் கால்வாயில் தூர்வார வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். முதலமைச்சர் துணை முதலமைச்சர் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது சென்னைக்கு மழை நீரை சேகரிக்கும் இடமான நீர் பிடிப்பு பகுதிகளான – செம்பரம்பாக்கம் புழல் ஏரி பகுதிகளில் மழை பெய்ய வேண்டும். அப்போதுதான் சென்னைக்கான குடிநீரைப் பெற முடியும்.
மாநகராட்சியின் கீழ் இருக்கக்கூடிய சாலைகளை இப்பொழுது செப்பனிட முடியாது மழை முடிந்த பிறகு, அந்த சாலைகள் சரி செய்யப்படும். நேற்று 200 கோடி ரூபாய் கோவைக்கு ஒதுக்கப்பட்டது அதுபோல சென்னைக்கும் நிதி ஒதுக்கப்படும் அதன் பின்னர் பணிகள் தீவிர படுத்தபடும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
மழை காரணமாக கொசு அதிகரிப்பு அதிகமாக இருக்கிறது, தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. என்ன தேவையோ அதை செய்ய வேண்டும், அதை செய்து வருகிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.






