சாம்பியன்ஸ் கிரிக்கெட் டிராபி சர்சைக்கு தீர்வு
ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ அறிவித்தது.

மேலும் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் துபாயில் நடத்துமாறும் வலியுறுத்தியது. இதனையடுத்து நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் இணைந்து நடத்த ஐசிசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் ஹைபிரிட் மாடலில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 2024 முதல் 2027 வரை இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி., தொடர்களில் பாகிஸ்தானும், பாகிஸ்தானில் நடக்கும் தொடர்களில் இந்திய அணியும் பங்கேற்க செல்லாது. மாறாக இந்த இரு அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து விரைவில் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (துபாய்) நடக்க வாய்ப்புள்ளது. தவிர, 2026ல் இந்தியா-இலங்கை இணைந்து மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளன. இதில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடக்கலாம். இதேபோல் இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.








