இந்திய அணி வியக்க வைக்கிறது
ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வியக்க வைக்கிறது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது இந்தியா. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில், வரும் டிசம்பர் 6-10ல் நடக்க இருக்கிறது.
இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன், 2 நாட்கள் பகலிரவு பயிற்சி போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளது. இப்போட்டி நாளை கான்பெராவில் உள்ள மானுகா ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.
இதனிடையே கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்ஸ், இந்திய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார். அப்போது பெர்த் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, கோலி உள்ளிட்டோரை வெகுவாக பாராட்டினார்.

பும்ராவிடம், உங்களது ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது எனவும், கோலியிடம் பெர்த்தில் சதம் அடித்து அசத்தி விட்டீர்கள் எனவும் புகழ்ந்தார். அப்போது ஜாக் எட்வர்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் வீரர்களும் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ இந்திய கிரிக்கெட் அணி வியக்கத்தக்கதாக உள்ளது. இதனால் மானுகா ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு சவால் காத்திருக்கிறது. இருப்பினும் இந்திய பிரதமர் மோடியிடம் கூறியது போல ‘ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவர்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கான்பெரா நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பும் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த வாரமும் இதனை சாதித்தோம். இந்த வெற்றிகளை மீண்டும் தொடர விரும்புகிறோம். அடுத்த சில வாரங்களில் ஆஸ்திரேலிய மக்களையும், இந்திய ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என நம்புகிறோம். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, தமது X வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய லெவன் வீரர்களை, எனது நண்பர், பிரதமர் அந்தோணி அல்பான்ஸ் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. நடப்பு டெஸ்ட் தொடரை இந்தியாக சிறப்பாக துவக்கியுள்ளது. 140 கோடி இந்தியர்களின் ஆதரவும் அவர்களுக்கு உள்ளது. தொடர்ந்து சிறப்பான போட்டிகளை எதிர்பார்த்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.







