சென்னை செஸ் போட்டிகளை வென்ற தமிழர்கள்
அரவிந்த், பிரணவ்விற்கு குவியும் வாழ்த்து

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். சேலஞ்சர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2-வது சீசன், கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. 6வது சுற்று முடிவில் அமெரிக்காவின் ஆரோனியன் (4.0), இந்தியாவின் அர்ஜுன் (4.0), அரவிந்த் சிதம்பரம் (3.5) ஆகியோர் ‘டாப்-3′ ஆக இருந்தனர். நேற்று 7-வது மற்றும் கடைசி சுற்றுப் போட்டிகள் நடந்தன.
இதில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி – பிரான்ஸின் மேக்சிம் வாசியர், இந்தியாவின் விதித் குஜ்ராத்தி – ரஷ்யாவின் சரனா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் – ஈரானின் அமின் ஆகியோர் மோதிய போட்டிகள் சமனில் முடிந்தன.
அதேவேளையில் ஈரானின் பர்ஹாம்-க்கு எதிரான போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வென்றார். இதனால் அரவிந்த் சிதம்பரம் (4.5), ஆரோனியன் (4.5), அர்ஜுன் (4.5) என மூவரும் சம புள்ளிகள் பெற்றனர். இறுதியில்’டை பிரேக்கர்’ புள்ளி அடிப்படையில் அரவிந்த் சிதம்பரம் முதலிடம் பிடித்தார்.
பின்னர் நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஆரோனியனுடன் அரவிந்த் சிதம்பரம் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அசத்திய அரவிந்த் சிதம்பரம், 2.0-0 என அபாரமாக வெற்றி பெற்று, சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரின் சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றார். இதேபோன்று, சேலஞ்சர் பிரிவில் நடைபெற்ற போட்டியில், இந்தியாவின் பிரணவ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இரு சாம்பியன்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், வியூகரீதியிலான புத்திசாலித்தனத்தை இறுதிச்சுற்றில் அரவிந்த் உறுதிபட நிரூபித்தார் எனக் கூறியுள்ளார். பிரணவ்க்கு பாராட்டுகள் எனக் கூறியுள்ள ஸ்டாலின், அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுவதாகக் கூறியுள்ளார்.







