“என்னை வளர்த்த தமிழ் மண்ணுக்கு அன்பு”
#புஷ்பா2 பட விழாவில் அல்லு அர்ஜுன்!

”என்னை வளர்த்த தமிழ் மண்ணுக்கு என்னுடைய பணிவான மரியாதையும் அன்பும்” என்று சென்னையில் நடந்த ‘புஷ்பா2’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின் போது பான் இந்தியன் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் எமோஷனலாகப் பேசினார்.
‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியானவுடனே பல லட்சம் பேர் ஆவலாக அதைக் கண்டனர். அதன் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் ரசிகர்களிடையை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவானது.
புஷ்பா 2 படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக ‘புஷ்பா2’ படக்குழு இன்று தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் ப்ரீ ரிலீஸ் ஈவெண்டை நடத்தியது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர், நிகழ்வு நடக்கும் பகுதி முழுவதும் ‘புஷ்பா2’ தீம் கொண்டு அலங்கரித்திருந்தார்கள்.

இந்த நிகழ்வில், ‘புஷ்பாராஜ்’ அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சியான பேச்சுதான் இன்று தமிழ் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. ‘வணக்கம் தமிழ் மக்களே’ என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் முழுவதுமாக தமிழிலேயே பேசி அசத்தினார். சென்னையில் தனது சிறு வயது மற்றும் பள்ளிப்பருவ நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்தார். கடந்த இருபது வருடங்களாக சென்னையில் தனக்காக ஒரு நிகழ்வு நடத்த வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது எனவும் அது ‘புஷ்பா2’ நிகழ்வில் நிறைவேறி விட்டது எனவும் மகிழ்வுடன் சொன்னார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லு அர்ஜூனிடம் சிறுவயதில் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அவர் செய்து காட்டிய ஸ்டைல் மூவ்மெண்ட் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தை தான் குறிக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்ந்த கொண்ட அல்லு அர்ஜூன், ”கடந்த நான்கு வருடங்களாக ‘புஷ்பா2’ செட் எனது வீடு போல மாறிவிட்டது. மற்ற படங்களுக்காக நான் சென்றாலும் அங்கு ராஷ்மிகாவை மிஸ் செய்த ஆரம்பித்தேன். அந்த அளவிற்கு எங்களுக்குள் நல்ல நட்பு மலர்ந்திருக்கிறது” என்றார்.
நடிகை ஸ்ரீலீலா குறித்து பாராட்டி பேசும்போது, “அவர் அற்புதமான டான்ஸர். ஒவ்வொரு முறை அவரிடன் நடனத் திறமையை பார்க்கும்போது அவருக்கு இணையாக நானும் எனது நடனத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்” என்றார்.

இயக்குநர் சுகுமார் பற்றியும் அல்லு அர்ஜூன் பகிர்ந்து கொண்டார், “நாடு முழுவதும் நாங்கள் படத்தை புரோமோட் செய்யும் பணியை செய்து வருகிறோம். நாங்கள் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அதே வேளையில் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக அங்கு கடும் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குநர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் சார் அப்போது ‘ஆர்யா’ படத்துடன் வந்தார். ‘ஆர்யா’ படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது வாழ்க்கையிலும் முன்னேற்றித்திலும் சுகுமார் சாருக்கு பெரிய பங்குண்டு. ரசிகர்கள் நீங்கள் கொடுக்கும் அன்புதான் என் உயிர்நாடி. சீரான இடைவெளியில் தரமான படங்களை உங்களுக்கு வழங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
மேலும் பேசுகையில், பிரம்மாண்டமாக படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், கல்பாத்தி அகோரம் சாருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.







