500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்ப்பா?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்ட மறுப்பு

சென்னை, ஜன.2 ; தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கப் போவதாக வெளியான செய்தியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார். செய்தியை சரிவர புரிந்து கொள்ளாமல் கண்டனம் தெரிவிப்பதை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று (ஜனவரி, 2) மீண்டும் திறக்கப்பட்டது.
நீலாங்கரை பள்ளியில் அன்பில் மகேஷ் ஆய்வு

இதுபோன்ற சூழலில், சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் அமைந்திருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆய்வு செய்து, விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணாக்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதன்பின்னர், அமைச்சர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
“அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்ப்பு இல்லை”

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் , “அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதா நாளேடுகளில் வந்த செய்தி தவறானது” என மறுப்புத் தெரிவித்தார்.
“அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகளைப் போன்றவை, அதை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளித்தார்.
“தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்”

“முதலில் நான் என்ன பேசினேன் என்பதை கேட்டுவிட்டு, சந்தேகம் இருந்தால் கேளுங்கள், அதைவிடுத்து, செய்தியை உறுதிப்படுத்தாமல் கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, அமைச்சர் கடிந்து கொண்டார்.
சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தான் கூறியிருந்தேன் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.






