நாக் அவுட் சுற்றில் தமிழ்நாடு
சத்தீஷ்கரை 73 ரன்களில் வீழ்த்தி அபாரம்

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் சத்தீஷ்கர் அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.
விஜய் ஹராரே கிரிக்கெட் டிராபி தொடர் (‘லிஸ்ட் ஏ’) இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஆந்திராவின் விஜயநகரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில், தமிழகம் – சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ‘டாஸ்’ வென்று சத்தீஸ்கர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜெகதீசன் (21), துஷார் ரஹேஜா 28 ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த பூபதி குமார் (37), பிரதோஷ் (31) ரன்களில் அவுட் ஆகினர். பின்னர் ஜோடி சேர்ந்த இந்திரஜித் – விஜய் சங்கர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். இதில் விஜய் சங்கர் (71), இந்திரஜித் (75) ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் 50 ஓவரில் 301 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் தமிழ்நாடு இழந்தது. சத்தீஸ்கர் சார்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை சத்தீஸ்கர் விரட்டியது. இதில் தமிழக வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சத்தீஸ்கர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் பூபன் லால்வானி (54), அஷுதோஷ் சிங் (71) ஆறுதல் அளித்தனர். இறுதியில் 46 ஓவரில் 228 ரன்களுக்கு சத்தீஸ்கர் ஆல் அவுட்டானதால், 73 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அபாரமாக வென்றது. தமிழகம் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3, சாய் கிஷோர் 2 விக்கெட் சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு இதுவரை ஆடிய 6 லீக் ஆட்டங்களில் (4 வெற்றி, 1 தோல்வி, 1 ரத்து) 18 புள்ளிகள் பெற்று, ‘டி’ பிரிவில் 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை விஜய் சங்கர் தட்டிச் சென்றார்.







