இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் தகுதி
யூத் ஆசியக் கோப்பை டி-20 தொடர்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் யூத் ஆசியக் கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய
பெண்கள் அணி முன்னேறியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரியில் மகளிர் யூத் ஆசியக் கோப்பை (19 வயது) ‘டி-20′ கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. நேற்று நடந்த சூப்பர்-4 சுற்றின் 10வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில்’டாஸ்’ வென்ற இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே இலங்கையின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தொடக்க வீராங்கனைகள் சஞ்சனா (9), ஹிருனி (2) மோசமான துவக்கம் தந்தனர். 21 ரன்களில் சுமுது ரன் அவுட்டானார். கேப்டன் மனுதி மட்டும் 33 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டானதால், இலங்கை மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் சுழலில் மிரட்டிய ஆயுஷி 4, பாருனிகா 2 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு, ஈஷ்வரி (0), சனிகா (4) ஏமாற்றினர். பின்பு இணைந்த திரிஷா, கமலினி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. திரிஷா 32, கமலினி 28 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த மிதிலா (17) உதவ, இந்திய அணி 14.5 ஓவரில் 102/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய ஆயுஷி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் முதலில் ஆடிய நேபாளம் 8 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்பு எளிய இலக்கை விரட்டிய வங்கதேசம் 1 விக்கெட் மட்டுமே இழந்து 58 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து ‘சூப்பர்-4’ புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் இந்தியா (7), வங்கதேசம் (6), முதல் 2 இடங்கள் பிடித்ததால் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.








