“இனி நடக்கப் போவதில்லை..”; விரக்தியில் விலகிய வீரர்
இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க முடியாததால் வேதனை

அகமதாபாத்,மே.28; “இனி அது நடக்கப்போவதில்லை…”. ஆம், தேசிய அணியில் இடம்பெற்ற போதிலும், ‘விளையாடும் லெவன்’ என வரும்போது வாய்ப்பு கிட்டியதில்லை; உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களை குவித்தாலும், தேசிய அணிக்காக களமிறங்க வாய்ப்பு கனியவில்லை; தனது விளையாட்டுத்திறனை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற தாகத்திற்கு கடைசிவரை பலனே கிட்டவில்லை. விளைவு, விரக்தியடைந்த அந்த வீரர், “இனி அது நடக்கப்போவதில்லை..” என்ற முடிவுக்கு வந்து முதல் தர கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துவிட்டார். அவரது பெயர் (Priyank Panchal) பிரியங்க் பஞ்சல்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினமானது-ஒவ்வொரு ஆண்டும் புதிய ஹீரோக்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மிகச் சிலரே இந்திய கிரிக்கெட்டின் உயர் மட்டத்தை தக்க வைத்துக்கொள்ள முடிகிறது.
அணியில் இருப்பார், விளையாட வாய்ப்பு கிட்டாது..!

2021- 22-ல் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், விளையாடும் லெவனில் வாய்ப்பு கிட்டவில்லை.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய பிரியங்க் பஞ்சல், உள்நாட்டில் 127 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 8,856 ரன்கள் குவித்துள்ளார். 45.18 என சராசரி வைத்திருக்கும் இவர், 29 சதங்களையும் 34 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.
கனத்த இதயத்துடன் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்திய தேசிய அணிக்காக விளையாட முடியவில்லை என்ற விரக்தியுடனும் கனத்த இதயத்துடனும் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், பிரியங்க்.
இருந்தபோதிலும், தனது கிரிக்கெட் விதி இதுவரை வழங்கியவற்றுடன் திருப்தி அடைந்து விடை பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
“இந்திய அணிக்கு விளையாட முடியாதது வருத்தம் தான்..”

ஓய்வுபெற வேண்டும் என் ற எண்ணவோட்டம் தனது மனதில் சிறிது காலமாகமே இருந்ததாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாட விரும்பும் ஒரு உந்து சக்தி இருந்தது. உந்து சக்தியுடன், ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இருந்தது. அணியில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன். அதாவது, நான் இந்தியா ஏ அணிக்காக விளையாடினேன், ரஞ்சி டிராபியில் விளையாடினேன். இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் தான், ஆனால் இப்போது நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். அது இனி நடக்கப்போவதில்லை,” என்று பிரியங்க் பஞ்சல் கூறினார்.







