திபெத் நிலநடுக்கம்; உயிரிழப்பு 126 ஆக உயர்வு
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம்

திபெத், ஜன. 8 ; திபெத்தில் நேற்று (ஜன.7) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடர் காரணமாக 3,000க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாகின. காயமடைந்த 180 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக திபெத் மீட்புப் படையினர் கூறியுள்ளனர். திபெத்தில் சமீபத்திய ஆண்டுகளில் இவ்வளவு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை என்று, அரசு தெரிவித்துள்ளது.







